ஆண்டாள் பி சொக்கலிங்கம்

இன்றைய நவீன காலகட்டத்தில் வாழும் மக்களுக்கு ஏற்றார் போல், இந்த உலகில் எல்லா இடங்களிலும் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்டன. அக்கட்டிடங்கள் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இல்லாவிடில், அங்கு நிம்மதியற்ற வாழ்வு ஏற்படும், நாம் நமது பிரச்சனையிலிருந்து வெளிவர முயலும்போது அதற்கு ஒரு தீர்வு வரும். அதே போல், வாஸ்து விதிகளின்படி ஒரு வீடோ / வியாபார ஸ்தலமோ அமைக்கப்படவில்லையென்றால். அதற்கான தீர்வு பணத்தினால் வாங்கப்படும் பரிகாரப்பொருட்களில் இல்லை. வாஸ்துவில் என்றுமே தீர்வுகள் (பரிகாரங்கள்) இயற்கை தரக்கூடியதாகவே இருக்கும். இயற்கையால் உண்டாகின்ற தீர்வு ஒன்று மட்டுமே மனித இனத்திற்கு என்றுமே வெற்றி வாழ்விற்கு துணை செய்யும்.

வாஸ்துவில் யந்திரங்களுக்கும், மந்திரங்களுக்கும் வேலை இல்லை. வாஸ்து குறைபாடுகள் உள்ள வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் இயற்கையான பரிகாரம் என்பது கீழ்கண்ட விஷயங்கள் மட்டும் தான்:

  • வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன், கணவனை பிரிந்த மனைவி, மனைவியை பிரிந்த கணவன், உடல் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பேறு இல்லாதவர்கள், ஆதரவற்ற அனாதைகள் ஆகியோர் வசிக்கும் போதும், வேலை பார்க்கும்போதும் 100% வாஸ்து கோளாறுகள் அந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடம் அங்கு இருப்போரை பெரிய பாதிப்பில்லாமல் வாழவிடுகின்றது. பெரிய பிரச்சனைகளை அந்த இடம் ஏற்படுத்துவதில்லை.(ஒரு இடத்தில் பெரிய வாஸ்து கோளாறுகள் இருந்தும் அந்த இடத்தில் உள்ள ஒருவர் உயரமான நிலைக்கு போகிறார் என்கிறபோது அப்படி போகிறவர் மேலும் உயரமான நிலைக்கு போக வேண்டும் என்ற விதி இருப்பின் அந்த இடமே மேற்சொன்ன பரிகாரங்களை உருவாக்கி கொள்ளும்.)
  • பசு வளர்ப்பதும் / நாய்கள் வளர்ப்பதும் / காக்கைகளுக்கு பச்சரிசி, எள் அளிப்பது மிகப் பெரிய பரிகாரம்.
  • பெண் பெயரால் நிலத்தை வாங்குவதும், பெண் பெயருக்கு நிலத்தை கொடுப்பதும், பெண்ணை முன்னிறுத்தி வியாபாரம் செய்வதும் மிகச் சிறந்த பரிகாரங்களாகும்.
  • தினமும் சூரியனை வணங்குதலும்,சீரான குலதெய்வ வழிபாடும், உண்மையான ஏழைகளுக்கு திருமண உதவி செய்தலும்மிகச் சிறந்த பரிகாரமாகும்.
  • உண்மையான ஏழைகளுக்கு பசி ஆற்றுதுல், வஸ்த்திர தானம், கல்வி தானம் அளிப்பது சாலச்சிறந்தது.
  • பெற்ற / வளர்த்த தாய், தந்தையரை எல்லா காலத்திலும் நல்லபடியாக காப்பாற்ற வேண்டும்.
  • எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மையான முறையில் பொருளீட்ட வேண்டும்.
  • இயற்கைக்கு முரணான முறையில் வட்டி தொழிலில் ஈடுபட்டு பொருள் சம்பாதிப்பது தவறாகையால் அதனை தவிர்த்தல் நல்லது.
  • எண்ணம், சொல், செயல், எப்போதும் நேர்மையாக இருக்க வடகிழக்கு மூலையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் கண்டிப்பாக ஜன்னல்கள் இருக்க வேண்டும். (24 x 7) ஜன்னல்கள் திறந்தே இருக்க வேண்டும்).